×

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் இறந்தது அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட செயற்கை மரணம்

ஈரோடு, அக். 31: ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் இறந்தது அரசின் கவனக்குறைவால் ஏற்பட்ட செயற்கை மரணம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் மரணம் இயற்கை மரணம் அல்ல. கவனக்குறைவால் ஏற்பட்ட செயற்கை மரணம். இனிவொரு மரணம் இப்படி நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து ஆழ்துளை கிணறுகளும் பாதுகாப்பான மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கான வரைமுறைகளை தாமதம் இல்லாமல் அரசு வகுக்க வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆழ்துளை கிணறு இருப்பிடங்களை கணக்கெடுக்க வேண்டும். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பின்னால் யார், யாரிடத்தில் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது. அதை கொண்டு வாருங்கள் என அரசு கூறியதை உடனே செயல்படுத்த வேண்டும். ஒவ்வொருவருடைய தொழில்நுட்பத்தையும் பேரிடர் மீட்புக்குழு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை அடிப்படையில் பயன்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை பொம்மைகளை வைத்து மீட்டெடுத்து பார்க்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலும் என்ன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து வைத்து இதுபோன்ற காலங்களில் அழைத்து வர முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும்.

எந்தெந்த வழிமுறைகளை எப்படி கையாள வேண்டும்? என அரசு பட்டியலிட்டு பாதுகாப்பான வழிமுறைகளை வகுக்க வேண்டும். குறிப்பாக, பேரிடர் மீட்பு வீரர்களை ஹெலிகாப்டர் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவழைக்க தகுந்த அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஒரு முயற்சி பலனளிக்காமல் போன பின், அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து அடுத்தக்கட்ட முயற்சிக்கு ஆட்களை அழைக்க கூடாது. அனைத்து தொழில்நுட்பத்திலும் திறமை வாய்ந்தவர்களை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Tags : Sujith ,well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...