×

சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டி கோவை கல்லூரி மாணவி இந்திய அணிக்கு தேர்வு

கோவை, அக். 31:  ரஷ்யாவில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்க இந்திய ஏரோபிக்ஸ் அணிக்கு கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவி சுப்ரஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் விளையாட்டு போட்டிகள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் வரும் நாளை மறுநாள் (நவம்பர் 1ம் தேதி) முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்திய அணி சார்பில் 6 பேர் பங்கேற்கின்றனர். இந்த அணியில் தமிழகத்தின் சார்பில் கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த சுப்ரஜா(17) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாணவியை கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி, கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஜெயச்சித்ரா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மேலும், மாணவி தற்போது டெல்லியில் நடைபெறும் 2 நாள் முகாமில் பங்கேற்றுள்ளார். இது குறித்து மாணவி சுப்ரஜா கூறியதாவது: எனது சொந்த ஊர் சேலம் அழகாபுரம். எனது தந்தை பெருமாள். ஆட்டோ டிரைவர். தாய் பார்வதி. முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. என்னுடைய பயிற்சியாளரும் கூட. நான் கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வருகிறேன். நான் 6ம் வகுப்பு முதல் ஜிம்னாஸ்டிக் கற்று வருகிறேன். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். கடந்த 2017ல் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் இந்திய அணிக்காக பங்கேற்று தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளேன். எனது தேசிய அளவிலான வெற்றிகளின் அடிப்படையில் எனக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு மீண்டும் வந்துள்ளது.

தற்போது, டெல்லியில் நடக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறேன். இதனை தொடர்ந்து, ரஷ்யாவில் வரும் 1ம் தேதி முதல் நடக்கும் சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் போட்டியில் 17 வயது பிரிவில் ஸ்போர்ட்ஸ் ஏேராபிக்ஸ் மற்றும் ஹிப்பாப் ஆகிய 2 பிரிவுகளில் பங்கேற்கவுள்ளேன். இப்போட்டியில், நிச்சயமாக வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : student ,team ,Aerobics Competition Coimbatore College ,Indian ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...