×

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகளில் தொடர் மழை தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்

திருக்கழுக்குன்றம், அக். 31: திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதகிளில் தொடர் மழை பெய்து வருவதால், வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருக்கழுக்குன்றம் - கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதையொட்டி புதுப்பட்டினம் ஊராட்சி ராஜா நகர், பாரத் நகர் உள்பட பல பகுதிகளில் கால்வாய் வசதி இல்லாததால், மழைநீர் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. அதேப்போல் ராஜா நகர், பாரத் நகர் அருகில் உள்ள ஒரு பொதுப்பணித் துறை ஏரியின் கரையை முறையாக பலப்படுத்தாததால், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில் அதன் கரையில் மண்சரிவு ஏற்பட்டு, ஏரியில் தண்ணீர் நிற்க முடியாமல் வெளியேறுகிறது. இதனால், அதிகப்படியான நீர் இப்பகுதிகளில் சூழ்ந்து வருகிறது.

இப்பகுதியில், தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக கால்வாய் மூலம் வெளியேற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதூர், காட்டூர், அகதீஸ்வரமங்கலம் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கால்வாய்களில் மழைநீர் செல்ல முடியாமல் அடைப்புகள் ஏற்பட்டிருந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுரேஷ் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை குழுவினர் ஆய்வு செய்து, அந்த அடைப்புகளை சரி செய்து, மழைநீர் முறையாக கால்வாய்களில் செல்ல வழிவகை செய்தனர்.

Tags : Homes ,season ,Kalpakkam ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு வானியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம்