×

நன்னடத்தை உறுதிமொழியை மீறிய பிரபல ரவுடிக்கு 142 நாட்கள் சிறை: துணை கமிஷனர் நடவடிக்கை

ஆவடி: நன்னடத்தை உறுதிமொழியை மீறிய அம்பத்தூரை சேர்ந்த பிரபல ரவுடிக்கு 142 நாள் சிறை தண்டனையை விதித்து, போலீஸ் துணை கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். அம்பத்தூர் மங்களபுரம், குள்ளன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33). பிரபல ரவுடி.  இவர் மீது அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மார்ச் 3ம் தேதி சதீஷ்குமார் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் சதீஷ்குமாரிடம் ஒரு ஆண்டுக்கு எந்த குற்றம் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி சதீஷ்குமார், அதே பகுதியை சேர்ந்த காந்திமதி (48) என்ற பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை எஸ்.ஐ நாட்டாலம்மை தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் நன்னடத்தை உறுதிமொழியை மீறியதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் அவரை காவலில் எடுத்து போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் முன்பாக ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பிறகு நன்னடத்தை உறுதிமொழியை மீறிய சதீஷ்குமாரை ஒரு ஆண்டில்  தவறு  செய்யாத நாட்களை கழித்து மீதி உள்ள 142 நாட்களுக்கு சிறை தண்டனை வழங்கினார். இதையடுத்து போலீசார் மீண்டும் சதீஷ்குமாரை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : jail ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை