புதுச்சேரி, அக். 31: புதுவை புதிய பஸ் நிலையத்தின் நடைபாதை மேம்பாலத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் ஐகோர்ட் தாமாகவே முன்வந்து முன்வந்து தமிழகம் முழுவதும் பேனர் தடை சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளது. புதுச்சேரியல் இச்சட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையிலும் அதை அமுல்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குறிப்பாக புதுவை பஸ் நிலையம் எதிரே உள்ள நடைபாதை மேம்பாலத்தில் இருபுறமும் மிகப்பெரிய பேனர் அமைத்துக் கொள்ள தனியார் விளம்பரதாரர் நிறுவனத்துக்கு ரூ.2.12 லட்சத்துக்கு வாடகைக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை இதுவரை ரத்து செய்யவில்லை. இந்த பேனரால் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் இதற்கு அரசு முழு பொறுப்பேற்குமா?.
மேலும் அங்கு மேற்கூரை, சிசிடிவி கேமரா, அலங்கார விளக்குகள் அமைக்க தடையில்லா சான்றிதழ் வழங்கியது ஏன்?. எனவே இதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் ஆகியவற்றால் திறந்த வெளியில் பேனர்கள் அமைத்துக் கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியையும் ரத்து செய்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி புகார் மனு அளித்துள்ளார்.