×

தொழிற்பேட்டையில் சிவா எம்எல்ஏ ஆய்வு

புதுச்சேரி, அக். 31:  மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை பிப்டிக் தலைவர் சிவா எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது மழைநீரை சேமிப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால் மேட்டுப்பாளையம் பிப்டிக் தொழிற்பேட்டையில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் மழைநீர் தொழிற்சாலைகளுக்குள் புகுந்து சேதம் ஏற்படுவதாகவும், குறிப்பாக 28வது குறுக்குச் சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சிரப்படுவதாகவும், சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பிப்டிக் தலைவர் சிவா  தலைமையில் மேலாண் இயக்குநர் சத்தியமூர்த்தி, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை உதவிப் பொறியாளர் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர்  பிப்டிக் தொழிற்பேட்டைகளில் ஆய்வு மேற்கொண்டனர். சாலைகளை உடனடியாக செப்பனிடவும், மழைநீர் தொழிற்சாலைகளுக்குள் செல்லாதவாறு, வாய்க்கால்களை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து தொழிற்சாலைகளில் மழைநீரை சேமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சேம்பர் ஆப் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் திருமாள், நிர்வாகிகள் சேகர், அருட்செல்வம், சொக்கநாதன், வீர்ராகவன், நந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Siva MLA Study in Labor ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...