×

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

நெய்வேலி, அக். 31: குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாச்சி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுமார் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின்  கீழ் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் தற்போது பழுதடைந்து ஜன்னல்கள் உடைந்து சுவரில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இந்த கட்டிடத்தில் உள்ள சிமெண்ட் ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் மழை காலங்களில் அங்கன்வாடி மையம் முழுவதும் மழைநீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள் அமர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கான கழிப்பிடம் இல்லாமல் திறந்தவெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் கட்டிடத்தை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளதால் விஷ பூச்சிகள் தங்கும் இடமாக மாறி உள்ளது. தற்போது மழைகாலம் துவங்கியுள்ள நிலையில் கட்டிடம் பலவீனமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப அச்சப்படுகிறார்கள். எனவே இந்த அங்கன்வாடி மையத்தை உடனடியாக இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Anganwadi Center ,
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்