சோளிங்கர், அக்.31: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிக்காக கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு 6 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்து 9.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது ரோப்கார் அமைக்கும் வரைபடத்தை பார்வையிட்டார். பின்னர் மலைகளில் இருந்து வழிந்தோடும் மழைநீரை சேமிக்கும் வகையில் சிறிய தடுப்பணைகளை கட்ட வேண்டும். இங்கு குரங்குகள் அதிகமாக உள்ளதால் மலைகளை சுற்றி பழ மரச்செடிகளை நடவேண்டும். ரோப்கார் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஆர்டிஓ இளம்பகவத், கோயில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், பேரூராட்சி செயல்அலுவலர் செண்பகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.