தரங்கம்பாடி, அக்.31: நாகை மாவட்டம், திருக்கடையூர் அரசு விவசாய பண்ணையில் குழித்தட்டு முறை நாற்றாங்கால் நடவு செய்யும் ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவாக்க்பபட்டுள்ள புதிய இயந்திரத்தை கலெக்டர் பிரவீன் பி.நாயர் ஆய்வு செய்தார். திருக்கடையூர் விவசாய பண்ணையில் ஜப்பான் தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படும் வகையில் குழித்தட்டு நெல்விதை மூலம் நாற்றுகளை நடவு செய்யும் இயந்திரத்தை இயக்கி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது வேளாண் அலுவலர் குமரன் புதிய இயந்திரம் குறித்து கலெக்டரிடம் விளக்கி கூறினார். குழித்தட்டு நெல் விதை மூலம் ஒரு ஏக்கருக்கு 3 அல்லது 4 கிலோ மட்டுமே பயன்படுத்தி நாற்றாங்கால் அமைக்கலாம்.
இந்த முறையின் மூலம் நடவு செய்தால் ஏக்கருக்கு 4 அல்லது 5 டன் வரை மகசூல் பெறலாம். மேலும் இந்த நாற்றாங்கால் மூலம் 16 நாட்களில் நாற்று நடவு பணியை இயந்திரம் மூலம் மேற்கொள்ள முடியும். இந்த முறையில் சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 5ஆயிரம் முதல் 6ஆயிரம் வரை தான் செலவாகும். வருகின்ற காலங்களில் விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்தி விவசாயம் செய்தால் நல்ல மகசூலை பெறலாம் என்று வேளாண் அலுவலர் குமரன் மேலும் தெரிவித்தார். மேலும் கலெக்டர் விவசாய பண்ணைக்கு சொந்தமான நிலத்தில் பாய் நாற்றாங்கால் நடவு பணியை இயந்திரம் மூலம் துவக்கி வைத்தார். ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம், உதவி இயக்குனர் தாமஸ், உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.