×

வாணியம்பாடி அருகே சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து 2 ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சி

வாணியம்பாடி, அக்.27: வாணியம்பாடி அருகே 2 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் மிளகாய் பொடியை தூவிட்டு தப்பியோடிவிட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று காலை பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் வாசலில் மிளகாய் பொடி தூவியிருப்பதையும், ஏடிஎம் மெஷினில் கீழ் பகுதியில் நசுங்கியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதேபோல், தெக்குப்பட்டு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்திற்கு நேற்று காலை சென்ற பொதுமக்கள் ஏடிஎம் மையத்தில் மிளகாய் பொடி தூவியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அம்பலூர் போலீசார் இரு மையங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

அதில், அம்பலூர் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் கிளவுஸ் இருந்ததை கைப்பற்றினர். நள்ளிரவில் அம்பலூர் ஏடிஎம், தெக்குப்பட்டு ஏடிஎம்மிலும் புகுந்த மர்ம ஆசாமிகள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. இதனால் அவர்கள் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமராவில் இருந்த பதிவுகளை பார்த்தனர். அப்போது மர்ம ஆசாமிகள் சிசிடிவி கேமரா மீது ஸ்பிரே அடித்தது தெரியவந்தது. இதையடுத்து 2 இடங்களில் இருந்த கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி அருகே 2 ஏடிஎம்களில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : robbery ,ATM centers ,Vaniyambadi ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...