×

அமைக்கப்படாத பேருந்து நிறுத்தம் அதிவேகமாக வந்த லாரி; நூலிழையில் தப்பிய பயணிகள்

கோவை,அக்.27 கோவை சூலூர் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள சித்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சாலையோரத்தில்தான் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அங்கு அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது,  அந்த வழியே அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஒன்று, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருத்த அவர்கள் மீது மோதும் வகையில் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பின் பக்கமாக ஓடிச்சென்று நூலிழையில் உயிர் தப்பினர். இதில் ஒரு பெண் சாலையின் அருகே உள்ள குழியில் தடுமாறி விழுந்தார். இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் வேகத்தடை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைத்து தரவேண்டும் என ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : bus stop Travelers ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு