பெருந்துறை, அக். 27: ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் போக்குவரத்து விதிமுறை மீறியவர்களிடம் இருந்து ரூ.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கிட்டரமணி மற்றும் ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி ஆகியோர் கடந்த ஜனவரி 2019 முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலங்களில் பெருந்துறை பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அதனடிப்படையில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 750 வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் வரியாக ரூ.22 கோடியே 7 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படுத்திய 54 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற மூன்று பேரின் ஆட்டோ ஓட்டுனர் உரிமமும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 16 பேரின் ஓட்டுநர் உரிமமும், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற 11 பேரின் ஓட்டுநர் உரிமமும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரின் உரிமமும், நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வாகனம் ஓட்டி வந்த ஒருவரின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பெருந்துறை வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கிட்ட ரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.