×

கால்வாய் காணாமல் போனதால் செட்டிகுளம் கண்மாய் நிரம்பி வயலுக்குள் புகுந்த தண்ணீர் போடி அருகே விவசாயம் பாதிக்கும் அபாயம்

போடி, அக். 25:  போடி அருகே கால்வாய் காணாமல் போனதால் தண்ணீர் வயலுக்குள் புகுந்தததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். போடி அருகே பொட்டல்களம் கிராமம் போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் உள்ளது. இங்கு 100 ஏக்கர் பரப்பளவில் செட்டிகுளம் கண்மாய் உள்ளது. போடி மக்களின் குடிநீர் ஆதாரமாக இக்கண்மாய் திகழ்கிறது.போடி மேற்கு மலையான கொட்டகுடி ஆற்றிலிருந்து மழைக்காலங்களில் வெள்ளமாக பாயும் தண்ணீர் வங்காருசாமி கண்மாய், சங்கரப்பநாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய்களை நிரப்பும். இதனால்  மூன்று கண்மாய்களும் கடல் போல் காட்சியளிக்கும். மீனாட்சியம்மன் கண்மாய் நிரம்பியவுடன் ஷட்டரில் இருந்து கசிந்திடும் தண்ணீர் அருகி லுள்ள செட்டிகுளம் கண்மாயை நிரப்பும். இதன் பின் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து 8 கி.மீ தொலைவில் உள்ள டொம்புச்சேரி கண்மாய்க்கு தண்ணீர் சென்றடையும்.கடந்த சில நாட்ளுக்கு முன் செட்டிகுளம் கண்மாய் நிறைந்தவுடன் தண்ணீர் மறுகால் பாய்ந்து வெளியேறியது. ஆனால்,  கால்வாய் காணாமல் போனதால் தண்ணீர் வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனால் தண்ணீர் டொம்புச்சேரி கண்மாய்க்கு போய் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த தண்ணீரால் தான் வருடத்திற்கு ஒருமுறை நெல் சாகுபடியும்,  கிணறு ஆழ்குழாய் பாசனமும் நடைபெறுகிறது. தற்போது அது நடக்குமா என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 8 கி.மீ கால்வாயில் 3 கி.மீ கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போய் உள்ளது. குடிமராமத்து பணியில் இந்த கால்வாயைக் கண்டுபிடித்து ஆக்கிரமிப்பை அகற்றி கரைகளை உயர்த்தி இருந்தால் வீணாக தண்ணீர் வயல்வெளிக்கு சென்றிருக்காது என விவசாயிகள் புலம்புகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், செட்டிகுளம் கண்மாயில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்தும் கால்வாய் காணாமல் போனதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல் சாகுபடி நடைபெறுமா என்றகேள்வி எழுந்துள்ளது என்றனர்.



Tags : disappearance ,canal ,Chettikulam ,flooding ,
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்