வலங்கைமான், அக்.25: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடியில் ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இத்தலம் சோழநாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஸ்தலங்களில் 98வது ஸ்தலமாக விளங்கிவருகிறது. இது நவகிரகங்களில் குருபரிகாரஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வெரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பதையே குருப்பெயர்ச்சி என்கிறோம். இந்த ஆண்டு குருபகவான் வருகிற 29ம் தேதி (செவ்வாய்க் கிழமை) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.
அதனை முன்னிட்டு குருகோயிலில் குருபெயர்ச்சிக்கு முன், குருப்பெயர்சிக்கு பின் என இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. குருப்பெயர்ச்சிக்கு முன் முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. முன்னதாக உற்சவர் குருபகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லட்சார்சனையின்போது குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டது. முதல் கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா குருப்பெயர்ச்சிக்கு பின் இம்மாதம் 31ம் தேதி முதல் நவம்பர் மாதம் 7ம்தேதி வரை நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை உதவி ஆணையரும் ஆலய செயல் அலுவலரும், தக்காருமான தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.