மார்த்தாண்டம், அக்.25: விளவங்கோடு தாலுகா களியல் கிராமத்தில் ஆலஞ்சோலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கரிபையன் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் இருந்து விவசாய தேவைக்கு என மண் எடுக்க அதிமுகவை சேர்ந்த ஒருவர் அனுமதி பெற்றுள்ளார். இதன்படி குளத்தில் இருந்து மண் எடுப்பதற்காக டெம்போவை குளத்துக்குள் கொண்டு செல்ல பாதை அமைத்துள்ளனர். பாதை அமைப்பதற்காக வெளியில் இருந்து மண் கொண்டு சென்ற வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து குளத்தின் பக்கத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இருந்து மண் எடுத்து சாலை அமைத்து அந்த வழியாக குளத்தில் இருந்து அனுமதி பெற்ற அளவுக்கும் அதிகமாக மண் எடுத்து விற்பனைக்காக கொண்டு சென்றனர்.
அதுபோல் குளத்தில் இருந்து ஏராளமான லோடு மணலும் எடுக்கப்பட்டு வருகிறது. குளத்தில் மண் மற்றும் மணல் எடுப்பதற்கு வசதியாக தனியார் எஸ்டேட் வழியாக பெரிய ஓடை அமைத்து குளத்து நீரை திறந்து விட்டுள்ளனர். இதனால் கோடை காலத்தில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் குளத்தின் சுற்றுசுவரையும் இடித்து அகற்றியுள்ளனர். எனவே அரசு விதிமுறைகளை மீறி மண் எடுப்பது, குளத்தில் இருந்து மணல் கடத்துவது, விவசாயத்துக்காக தேக்கி வைத்திருந்த தண்ணீரை வீணாக திறந்து விட்டது போன்ற ெசயல்களை செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக உரிமைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.