×

தாட்கோ திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு

திண்டுக்கல், அக். 25: திண்டுக்கல் மாவட்டத்தில் 2019-2020ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) திட்டங்களில் பயன்பெற விருப்பமுள்ள ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்ததாவது:நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறு அமைத்தல் திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான வரம்பு ரூ.1.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதேபோல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், இரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரை ஆகும்.

மேலும், மகளில் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவிகளுக்கு மானியத்துடன் கூடிய நிதியுதவி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம் திட்டத்தொகையில் 50 சதவீதம் ஆகும். மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவர் அவர்களின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி-ஐ முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவுக்கணக்கர், நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களில் பயன்பெறுவதற்கு ஆதிதிராவிடர் பிரிவினை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தாட்கோ இணையதள முகவரி < http://application.tahdco.com > மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டிய தில்லை. விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விபரங்கள், புகைப்படம், சாதிச்சான்று, வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் தொலைபேசி அல்லது கைபேசி, மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இணையதளத்தில் 24 மணிநேரமும் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி