கொடைக்கானல், அக். 25: கொடைக்கானலில் பராமரிப்பின்றி உள்ள தொலைநோக்கி நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் தொலைநோக்கி நிலையம் ஒன்று உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த இந்த நிலையத்தில் உள்ள தொலைநோக்கி மூலம் பழநி நகர் பகுதி, பழநி முருகன் கோயில், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வந்தனர். தற்போது போதிய பராமரிப்பின்றி சில ஆண்டுகளாக இந்த தொலைநோக்கி நிலையம் செயல்பாடின்றி உள்ளது. மேலும் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் இந்த இடம் மாறியுள்ளது. எனவே சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் இந்த தொலைநோக்கி நிலையத்தை சீரமைத்து மீண்டும் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.