×

நெய்வேலியில் துணிக்கடையில் புகுந்து பணம், செல்போன் பறிப்பு

நெய்வேலி, அக். 25: நெய்வேலி துணிக்கடையில் புகுந்து உரிமையாளரிடம் 3 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜாரில் துணிக்கடை நடத்தி வருபவர் ராஜேஷ் (28). இவரது கடையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு வியாபாரம் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் கடையில் துணிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கும்பல் கல்லாவில் உட்கார்ந்திருந்த கடை உரிமையாளர் ராஜேஷிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் மறுத்ததால் கல்லாப்பெட்டில் வைத்திருந்த 3 ஆயிரம் பணத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு, ராஜேஷின் செல்போனையும் பறித்துக்கொண்டு தப்பியோடினர். உடனடியாக ராஜேஷ் சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி, வடக்கு மேலூர் பகுதியை சேர்ந்த மணிவர்மா (38), பாக்கியராஜ் (38), கந்தவேல் (30), டேவிஸ் பிரவீன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இரவோடு இரவாக குற்றவாளிகள் 4 பேரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Neyveli ,cloth store ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் காரில் சோதனை