கடலூர், அக். 25: கடலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அலுவலகத்தில், தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் பேசுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விற்பனை மையம் துவங்கப்பட உள்ளது. அதன் முதன்மையாக குண்டுசாலை, செம்மண்டலம், கடலூரில் அமைந்துள்ள தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விற்பனை மையத்தில் தோட்டக்கலை பயிர்களிலிருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான ஜாம், ஜெல்லி, ஸ்க்வாஷ், ஜூஸ், சாஸ் மற்றும் ஊறுகாய் ஆகிய அனைத்தும் சரியான விலையில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் பொருட்களை அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். கூடிய விரைவில் நெய்வேலி மற்றும் விருத்தாசலத்திலும் விற்பனை மையங்கள் துவங்கப்பட உள்ளது, என்றார். நிகழ்ச்சியில், கடலூர் தோட்டக்கலை துணை இயக்குநர் ராஜாமணி, வேளாண்மை இணை இயக்குநர் முருகன், வேளாண்மை துணை இயக்குநர் பூங்கோதை, வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகவன், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.