×

சோழத்தரம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் அதிரடி கைது

முஷ்ணம், அக். 25: முஷ்ணம்-விருத்தாசலம் வட்டம் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் (40). இவர் கடந்த 18ம் தேதி சோழத்தரம் தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள டீக்கடையில் தேனீர் அருந்திவிட்டு திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதுகுறித்து கதிர்வேல் சோழத்தரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபோன்று வானதிராயபுரம் பகுதியை சேர்ந்த இமயவர்மன் (35) என்பவர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சென்றுவிட்டு சோழத்தரத்துக்கு திரும்பியுள்ளார். அப்போது வழியில் ஒரு கடையின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அவரது பைக்கும் மாயமாகி இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரிலும் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் மாமங்கலம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் பைக்கில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் சோழத்தரம் பகுதியில் இருந்து பைக்கை திருடி வந்ததும், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஜான்கென்னடி மகன் சிலம்பரசன் (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடமிருந்து 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்