அம்பை, அக். 25: கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் வளாகத்தில் மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவினரின் 500வது திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பண்ணிசை நிகழ்வு, சைவ சமய சொற்பொழிவு மற்றும் திருமுறை ஆதீனங்கள் பங்கேற்ற திருவாசகம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் தலைமை வகித்து திருவாசக நூலை வெளியிட்டு அருளாசி வழங்கினார். கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசக நூலை பெற்றுக்கொண்டு அருளாசி வழங்கினார். திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிகசத்ய ஞானபரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்கினார்.
முன்னதாக மந்திர புஷ்பங்கள் சாத்தி தூப தீபமேற்றி கொடிக்கவி பாடி ரிஷப கொடி வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. அணைக்கல் பகுதியில் இருந்து கயிலாய வாத்திய குழுவினருடன் திருமுறை திருநந்தி ஊர்வலம், திருமுறை இன்னிசை ஆளுரை மற்றும் சமய சொற்பொழிவு நடந்தது.
நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திலகர் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்றார். ஆசிரியர் சந்தோஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.