கரூர், அக். 25: கரூர் அபய பிரதான ரெங்கநாத சுவாமி கோயில் அருகே தனியார் நர்சரி பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் சத்தமில்லாத தீபாவளி என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி நடத்தப்பட்டது. கரூர் தெற்கு தெரு பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கோயில் அருகே உள்ள மேட்டுத் தெருவில் வரிசையாக நின்று மனித சங்கிலி நிகழ்வினை நடத்தி காட்டினர்.
பட்டாசு வெடிப்பதால் விலங்கினங்களுக்கு ஆபத்து நேருகிறது. மனிதர்களும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். தீப திருநாளான தீபாவளி பண்டிகையை சத்தமில்லா தீபாவளியாக கொண்டாடி மகிழ்வோம் என்பதை வலியுறுத்தும் வகையில், சிறுவர், சிறுமிகள் கைகளில் பேனர்களை ஏந்தி மனித சங்கிலியை நடத்திக் காட்டினர். இந்த வழியாக சென்று அனைத்து தரப்பு மக்களும் இதனை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.