அருப்புக்கோட்டை, அக். 24: அருப்புக்கோட்டையில் குழாய் பதிப்பதற்காக தோண்டிய பள்ளத்தை மூடாததால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் பகிர்மான குழாயை இணைப்பதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் பணிகள் நடந்தன. அப்போது பெரிய பள்ளத்தை தோண்டியவர்கள், அதனை தோண்டியவர்கள் மூடாமல், அப்படியே விட்டுவிட்டனர். இந்த வழியாகத்தான் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது பள்ளம் இடையூறாக உள்ளது.
மேலும் சாய்பாபா கோயில் செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் இந்த வழியாக சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் செல்லும்பொழுது இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். நான்குவழிச்சாலைக்கு இணைப்புச் சாலையாக உள்ள இந்த சாலையில் செல்லும் கனரக வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இந்த பள்ளத்தை மூடக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல ரயில்வே பீடர் ரோட்டிலும், டெலிபோன் ரோட்டிலும் குடிநீர் வால்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. பெரிய விபத்துகள் ஏற்படும் முன், பகிர்மான குழாய்களை பதிப்பதற்காக, தோண்டப்பட்ட பள்ளங்களை நகராட்சி நிர்வாகம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.