சூலூர்,அக்.24: சூலூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் மாணவி நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணனை தொடர்ந்து தம்பியையும் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே வசித்து வந்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த 2 வாரத்திற்கு முன் அவரது பெற்றோர்கள் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் வந்தனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக இருந்த விபரம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மாணவியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி அளித்த தகவலின் பேரில், மிதுன்சக்கரவர்த்தி(21) என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மீண்டும் போலீசார் விசாரணை நடத்தியதில் மிதுனின் அண்ணன் சதீஷ்குமார்(25) தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த, போலீசார் கடந்த 21ம் தேதி அவரைக் கைது செய்தனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி நீதிபதியிடம் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து போலீசார் மிதுன் சக்கரவர்த்தியை நேற்று கைது செய்தனர். மாணவியை கர்ப்பணியாக்கிய வழக்கில் முதலில் தம்பியிடம் விசாரித்த போலீசார் அவரை விடுவித்து அண்ணணை கைது செய்தனர். இப்போது தம்பியை கைது செய்துள்ளனர். அண்ணன்,தம்பி இருவரும் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கியதாக கூறப்படுகிறது.