×

திருவாரூரிலிருந்து நாமக்கல்லுக்கு 1,250 டன் அரிசி அனுப்பப்பட்டது

திருவாரூர், அக்.24: திருவாரூரிலிருந்து நாமக்கல் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக ஆயிரத்து 250 மெ.டன் அரிசி ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில் 3 லட்சத்து 65 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அறுவடை பணிகள் நடைபெற்றதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 436 அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து 5 லட்சத்து 43 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் அனைத்தும் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக அரைக்கப்படும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக அரிசி மற்றும் நெல் ரயில்கள் மூலம் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றுமுன்தினம் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்தின் பொது விநியோக திட்டத்திற்காக 21 வேகன்களில் ஆயிரத்து 250 மெ.டன் அரிசி மூட்டைகளை அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Tags : Namakkal ,Thiruvarur ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...