×

ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்து உத்தரவு நகல் எரித்து போராட்டம்

ஈரோடு, அக்.24:ரயில்வே துறை தனியார் மயமாவதை கண்டித்து உத்தரவு நகலை எரித்து எஸ்ஆர்எம்யு ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, ஈரோடு ரயில் நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே மருத்துவமனை முன்பு சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்ஆர்எம்யு ஈரோடு தலைமை கிளை செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சேலம் கோட்ட தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில், 50 ரயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க கடந்த 10ம் தேதி வெளியிட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியாரிடம் ரயில்வேயை ஒப்படைக்கும் நோக்கில் 60 வயதுக்கு முன்பே கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

சிசிஎஸ் விதியின்கீழ் ஊழியர்களை திறமையற்றவர்கள் என பழிசுமத்தி பணியில் இருந்து நீக்கும் உத்தரவை திரும்பபெற வேண்டும். பணிமனைகளை ஐஆர்ஆர்எஸ்சி என்ற கார்ப்பரேட் கீழ் கொண்டு வரக்கூடாது. அனைவருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. அமிதாப் காந்த் தலைமையிலான கமிட்டியால் போடப்பட்ட ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க போடப்பட்ட உத்தரவு நகலை எரித்து ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு உடைகள் அணிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags : protest ,
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...