கரூர், அக்.24: கரூர் தெரசா கார்னரில் சிக்னல் இயங்காததால் வாகனஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். இதனால் சிக்னலை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்திஉள்ளனர்.கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் தெரசா கார்னர் உள்ளது. இங்கு பசுபதிபாளையம் சாலை, திருச்சி சாலை, கரூரில் இருந்து செல்லும் சாலை என மூன்றுசாலை சந்திப்பாக இருக்கிறது.வாகனங்கள் எதிர்திசையில் வருவது தெரியாத அளவுக்கு சாலை திருப்பத்துடன் அமைந்திருக்கிறது. போக்குவரத்துக்கு ஏதுவாக இந்த இடத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று சாலைகளிலும் சுழற்சிமுறையில் விளக்குகள் எரிந்து போக்குவரத்துக்கு வசதியாக இருந்தது. ஆனால் இந்த சிக்னல் விளக்குகள் சமீபகாலமாக எரியவில்லை. சிக்னல் வேலை செய்யாததால் வேகமாக வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.மேலும் கனரக வாகனங்கள் எந்த திசையில் செல்லப்போகிறது என்பதை அறியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். எனவே சிக்னல் விளக்குகளை சரிசெய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.