விழுப்புரம், அக். 24: விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மத்தியஆய்வுக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் பாலுசாமி, ஜெமினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை, திண்டிவனம் மருத்துவமனை, கல்வராயன்மலை, மேலூர் ஒன்றியம், ஒலக்கூர் ஒன்றியம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட இடங்களில் செயல்படும் மேம்படுத்தப்பட்ட ஆரம்பசுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றை மத்திய ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். அந்த இடங்களில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெளிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கிராமங்களுக்கு நேரடியாக சென்று சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். குறிப்பாக தொற்று நோய்களான காசநோய், எச்ஐவி போன்ற நோய்களின் தடுப்பு நடவடிக்கைகளையும், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் தடுப்புகள் குறித்தும் களஆய்வுசெய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் தாய் பிரிவினையும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தொழுநோய் துணை இயக்குநர் கவிதா, காசநோய் துணை இயக்குநர் சுதாகர் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலர் கந்துகொண்டனர்.