×

அரக்கோணத்தில் ரயிலில் ஏறிய பெண்ணை தள்ளிவிட்ட பயணிகள் ரயிலை நிறுத்தி தட்டிக்கேட்டதால் பரபரப்பு

அரக்கோணம், அக்.24: அரக்கோணத்தில் ரயிலில் ஏறிய பெண்ணை அந்த பெட்டிக்குள் இருந்த பயணிகள் தள்ளிவிட்டதால் ரயிலை நிறுத்தி தட்டிக்கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வேலூர் மாவட்டம், அரக்கோணம், சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் சில்சார் எக்ஸ்பிரஸ் நேற்று காலை 9.20 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. பின்னர், பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது பெண் பயணி ஒருவர், ரயில் புறப்படுவதை கண்டு அவசரத்தில் முன்பதிவு செய்த ஒரு பெட்டியில் ஏற முயன்றாராம். அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள் சிலர், இது முன்பதிவு பெட்டி எனக்கூறி அந்த பெண்ணை தடுத்து தள்ளிவிட்டார்களாம். இதில் நிலைதடுமாறிய அந்த பெண், பிளாட்பாரத்தில் விழுந்தார். இதில், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

இதைப்பார்த்த பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனால் ரயில் மீண்டும் நின்றது. சம்பவம் நடந்த ரயில் பெட்டியின் முன் சக பயணிகள் ஏறி அங்கிருந்த பயணிகளிடம் சென்று, ‘இதுபோன்ற நிலை தொடர்கதையாகிவிட்டது. உங்களைப்போல நாங்களும் பயணிக்க வேண்டாமா? முன்பதிவு பெட்டி என தெரியாமல் ஏறியதில் என்ன குற்றம்? எதற்காக தள்ளி விட்டீர்கள் என சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர். தொடர்ந்து, ரயில் 15 நிமிடங்கள் காலதாமதமாக மீண்டும் புறப்பட்டு சென்றது. மேலும், இப்பிரச்னை குறித்து ரயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arakkonam ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...