×

தீபாவளி பண்டிகை முன்னிட்டு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை

வேலூர், அக்.24:தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இன்று முதல் வரும் 29ம் தேதி முதல் 6 நாட்கள் விடுமுறை எடுக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை செய்பவர்கள், தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், வழக்கமான ரயில்கள், பஸ்கள், ஆம்னி பஸ்களின் முன்பதிவு நடந்து வருகிறது.

இந்நிலையில், தீபாவளியையொட்டி இன்று முதல் 29ம் தேதி வரை, தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையிலும், வெளிமாநிலங்களில் இருந்தும், 11 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கோட்ட நிர்வாக இயக்குனர்கள், மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்கள், அதிகாரிகளுக்கு அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, இன்று முதல் 29ம் தேதி வரை, டிரைவர்கள், கண்டக்டர்கள், கண்காணிப்பாளர்கள், கிளை உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பில் சென்றவர்களை இன்று முதல் பணிக்கு திரும்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தீபாவளிக்கு, சொந்த ஊர் செல்லும் பயணிகள், சிரமம் இன்றி பண்டிகை கொண்டாட, வழக்கமான பஸ்களுடன், 11 ஆயிரம் கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு மட்டுமின்றி, பகலிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பஸ் ஸ்டாண்டுகளில் கூட்ட நெரிசலை கணக்கில் கொண்டு, பஸ்களை மாற்றி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து பிரிவு ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆகவே, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : University employees ,holidays ,Diwali ,
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...