×

திருவில்லி. அருகே அழகாபுரி சாலையில் போலீஸ் சோதனைச் சாவடி திறப்பு

திருவில்லிபுத்தூர், அக். 23: தினகரன் செய்தி எதிரொலியால்,  திருவில்லிபுத்தூர் அருகே, அழகாபுரி சாலையில் மூடப்பட்டிருந்த போலீஸ் சோதனைச் சாவடி திறக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை-திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அழகாபுரியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்த சாலை வழியாக விருதுநகர், ராஜபாளையம் புதூர் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் விபத்து என்றால், உடனடியாக போலீஸ் சோதனை சாவடியில் தகவல் தெரிவித்து, சம்மந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லி, விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியாக இருந்தது. மேலும், வாகனங்களில் கடத்தி வரும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். மேலும், தேவர் குருபூஜை, இம்மானுவேல் சேகரன் குருபூஜை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வந்தனர். இங்கு 24 மணி நேரம் கண்காணிக்கும் கண்காணிப்பு கேமராவும் உள்ளது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் திடீரென போலீஸ் சோதனைச் சாவடியை மூடினர். இது குறித்து நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அழகாபுரி சோதனைச் சாவடி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்னர்.

Tags : Tiruvilli ,Opening ,police checkpoint ,road ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா