×

பாகம்பிரியாள் கோயிலில் தங்கும் அறைகள் இல்லாமல் பக்தர்கள் அவதி

திருவாடானை, அக். 23: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்க போதுமான தங்கும் அறைகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்களும், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர் குறிப்பாக வியாழன் இரவு தங்கி வெள்ளிக்கிழமை காலையில் சாமி தரிசனம் செய்வதே சிறப்பாக கருதப்படுகிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் தங்கிட அறைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் வருகின்றனர். ஆனால் தேவஸ்தானம் சார்பில் எட்டு அறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியும் இடிந்த நிலையில் தற்போது பூட்டியே கிடக்கிறது. கோயிலில் திறந்தவெளி மண்டபம் இருந்தபோதிலும் பலர் பாதுகாப்பாக தங்க கருதி அறைகளை தேடுகின்றனர். அறைகள் கிடைக்காமல் பலர் ஏமாற்றம் அடைகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயிலுக்கு வருவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களுக்கு போதுமான அளவில் அறைகள் இல்லை. இதனால் அறைகளில் தங்கிக் கொள்ளலாம் என நம்பி வருவோர் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே பக்தர்களின் நலன்கருதி கூடுதல் அறை கட்ட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Devotees ,Bhagambriyal ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...