நாமக்கல், அக். 23: நாமக்கல்லில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. நாமக்கல்லில், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் வளர்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் (பொ) உதயகுமார் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மோகன், இளைஞர்களுக்கான நீதிச்சட்டம், குழந்தைகளின் பாதுகாப்பும், பராமரிப்பு குறித்து பேசினார். பள்ளி குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை களைய தலைமை ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த முகாமில் பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி மற்றும் 138 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் செய்திருந்தனர்.