ராசிபுரம், அக்.23: ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு ₹2.50 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா, நீர் தேக்கத்தொட்டி ஒப்படைக்கும் விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் 1996ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள், பள்ளிக்கு ₹2 லட்சம் மதிப்பில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள நிலத்தடி நீர் தேக்கத்தொட்டி கட்டி முடித்து, பள்ளிக்கு ஒப்படைத்தனர். மேலும் ₹50 ஆயிரம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) உதயகுமார், தலைமையாசிரியர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்பி சின்ராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலரிடம், முன்னாள் மாணவர்கள் சார்பில் நலத்திட்டங்கள் பள்ளிக்கு ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர் சதாசிவம், பள்ளிகளின் துணை ஆய்வாளர் பெரியசாமி, உதவி தலைமையாசிரியர் வரதராசன், முன்னாள் தலைமையாசிரியர் ஆறுமுகம், முதுநிலை தமிழாசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.