×

ஓசூர்-சென்னை இடையே ரயில் பாதை தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

ஓசூர், அக்.23: ஓசூரில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள்(ஹோஸ்டியா) சங்கம் சார்பில், ஓசூர்-சென்னை இடையே ரயில் பாதை அமைப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று  நடந்தது. கூட்டத்திற்கு, ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் வடிவேலு வரவேற்றார். இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது, ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மூன்று முறை சர்வே செய்தும், இத்திட்டத்தால் அரசுக்கு போதிய வருவாய் கிடைக்காது எனக்கூறி, ரயில்வே வாரியம் நிராகரித்தது. இந்த ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ₹1,600 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஓசூர்-ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டம் அமைத்தால் 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்டமுடியும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்ய சென்னை துறைமுகத்திற்கு செல்ல இதுவரை தரைவழி போக்குவரத்து மட்டுமே உள்ளது. இதனால், தொழில் துறையினருக்கு செலவு அதிகமானது.
இந்த ரயில் போக்குவரத்து தொடங்கினால் சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிக வருவாய் கிடைக்கும். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட் கற்கள், மாம்பழங்கள், மாம்பழக்கூழ், தக்காளி, மலர், ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல இந்த ரயில் பாதை பயனுள்ளதாக இருக்கும். எனவே ஓசூர் வர்த்தக சங்கத்தினர், ஓசூர் மக்கள் சங்கம், ஓசூர் ரயில் பயணிகள் சங்கம், கிருஷ்ணகிரி ஓசூர் வர்த்தக சங்கங்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தால் இத்திட்டத்தை விரைவில் கொண்டு வர முடியும்.

அடுத்த மாதம் மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அப்போது, கலெக்டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு எம்பி செல்லகுமார் பேசினார். கூட்டத்தில், ஓசூர் சத்யா எம்எல்ஏ, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், ஹோஸ்டியா சங்க முன்னாள் தலைவர் வெற்றிஞானசேகரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளீதரன், முன்னாள் ஹோஸ்டியா சங்க தலைவர்கள் சம்பத், நம்பி, பலர் கலந்து கொண்டனர்.

Tags : Railroad meeting ,Hosur ,Chennai ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...