×

தீபாவளி பண்டிகையையொட்டி நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகம்

தர்மபுரி, அக்.23: தீபாவளி பண்டிகையையொட்டி, நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் புகழ் பெற்ற வாரச்சந்தைகைளில் இதுவும் ஒன்று. இந்த வாரச் சந்தை 3.41 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுவினருக்கு தனியாக கடைகள் கட்டப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி, பரிகம், தொப்பூர், ஜருகு, ஈசல்பட்டி, நார்த்தம்பட்டி, முத்தம்பட்டி, குடிப்பட்டி, தேவரசம்பட்டி உள்ளிட்ட 32 ஊராட்சிகளிலில் இருந்து மக்கள் வாரச்சந்தைக்கு வருகின்றனர்.

சேலம், மேச்சேரி, மேட்டூர் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்தவர்களுக்கு வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர். நேற்று நடந்த சந்தையில், வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடும் நிலையில், ஆடு விற்பனை அமோகமாக நடந்தது. கொட்டும் மழையையும் பொருட் படுத்தாமல் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 5 கிலோ எடைகொண்ட ஒரு ஆட்டுக்குட்டி ₹6 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஆட்டிற்கு ₹2 ஆயிரம் முதல் ₹4 ஆயிரம் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி ஆடு விற்பனை கலைகட்டியது. நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஒருரே நாளில் சுமார் ₹2கோடி அளவிற்கு ஆடு, மாடு, கோழி விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சியால் தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆடு, மாடுகளை வளர்க்க முடியாமல் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்களில் ஆடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் விற்பனைக்கு ஆடு வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

Tags : Diwali ,Nallampalli Weekly Fair ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது