தோகைமலை, அக். 23: தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி கோயிலில் அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் காலபைரவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து காலபைரவருக்கு வடை மாலை அணிவித்து தேங்காய், பூசணிக்காய் விளக்கு ஏற்றி குடும்பங்களில் வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் மகழ்ச்சியுடன் வாழவும், தொழில் சிறக்கவும், வியாபாரங்கள் பெருகவும், இரவு நேர பயணங்கள் பயமின்றி இருக்கவும், வாகனங்கள், கால்நடைகள் வளர்ப்பு உட்பட குடும்பங்கள் சிறந்து விளங்க அஷ்டமி சிறப்பு பூஜையில் பக்தர்கள் காலபைரவரை வழிபட்டனர்.பின்னர் பக்தர்களுக்கு தயிர், எலுமிச்சை உள்பட பல்வேறு சாதங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையினை கோயில் அர்ச்சகர் கந்தசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினம் சிவம் ஆகியோர் நடத்தினர். இதில் ஆர்.டி.மலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை தரிசனம் செய்தனர்.