×

பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள்

கரூர், அக். 23: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுஉதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்திடவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், 2019ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நெல் பயிருக்கு பிரதமந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு 132 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர், கடன் பெறா விவசாயிகள், கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசிநாள் வரும் 30ம் தேதி. எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிரினை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5சதவீதம் மட்டும் பிரியமியம் செலுத்தினால் போதுமானது. அதாவது நெல் பயிருக்கு ரூ.487.50 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து கட்டணத்தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...