கோவை, அக். 23: கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஒருவருடைய 23 வயது மகள் கீரநத்தத்தில் உள்ள ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் பணியாற்றி வரும் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (24) என்பவருடன், அந்த பெண் நட்பு முறையில் பழகி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் தன்னை காதலிப்பதாக ரஞ்சித் தவறாக நினைத்துள்ளார். இதையறிந்த அந்த பெண் ரஞ்சித்துடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து அந்த பெண் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ரஞ்சித், அந்த பெண்ணை வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது தலைமுடியை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.