திருமயம்.அக்.23: திருமயம் பகுதி இளைஞர்கள் காக்கி சட்டை அணியாத காவலர்கள் தான் எனவே விழிப்புடன் தீபாவளி கொண்டாட வேண்டி போலீசார் சார்பில் வெளியிட்ட ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் தீபாவளி நெருங்கிவரும் நிலையில் மக்கள் தீபாவளியை கொண்டாட தாயாராகி வருகின்றனர். இதனை பயன்படுத்தி ஒருசில திருடர்கள் மக்களின் அஜாக்கிரதை பயன்படுத்தி கொண்டு வழிபறியில் ஈடுபட கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் மாலை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டி திருமயம் போலீசார் சார்பில் வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது திருமயம் பகுதியில் உள்ள வாட்ஸ் குருப்பில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் போலீசார் ஒருவர் திருமயம் பகுதி மக்கள் இளைஞர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதோடு பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது குறித்து சில அறிவுரைகளை தெரிவிக்கிறார்.
அதாவது பண்டிகை காலம் என்பதால் ஒரே டூவீலரில் 3, 4 பேர் செல்வதை தவிர்த்து, கட்டாயம் ஹெல்மெட் அணிவதோடு, எக்காரணத்தை கொண்டும் வாகனத்தில் அதிக வேகம் செல்வதை தவிர்ப்பதன் மூலம் நமது பகுதியில் விபத்து நடப்பதை தவிர்க்கலாம். மேலும் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நமது பகுதி இளைஞர்கள் உறவினர்களுக்கு தீபாவளி கொண்டாட பணம் அனுப்ப கூடும் அவ்வாறு வரும் பணத்தை எடுக்க சிறுவர்களிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க அனுப்ப வேண்டாம். அதே சமயம் பண்டிகை காலம் என்பதால் அந்நிய நபர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இதனால் திருமயம் பகுதி இளைஞர்கள் காக்கி சட்டை போடாத காவலர்கள் செயல்பட்டு சந்தேகப்படும் வாகனம், நபர்கள் தெரிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தோஷமாக தீபாவலி கொண்டாடுங்கள் என அந்த ஆடியோ முடிகிறது. திருமயம் போலீசாரின் இந்த எச்சரிக்கை ஆடியோ அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.