விராலிமலை, அக்.23: விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள், அத்திப்பள்ளம் கிராம இளைஞர்கள் விராலிமலை போலீசார் மற்றும் விராலிமலை அரசு ஆண்கள் மேல்திலைப்பள்ளி ஆகியோர் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு பேரணி விராலிமலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை விராலிமலை போலிஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி செக்போஸ்ட் கடைவீதி, சந்தைபேட்டை, கோரிமேடு, வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் தலைக்கவசம், உயிர்கவசம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், மிதவேகம் மிகநன்று, படியில் பயணம் நொடியில் மரணம், வளைவில் முந்தாதே, வாழ்க்கையை தொலைக்காதே என்பவை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோசமிட்டபடி சென்றனர்.தொடர்ந்து செக்போஸ்டில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விராலிமலை எல்ஐசி அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி பேசினார். முடிவில் சமூக ஆர்வலர் மூக்கையா நன்றி கூறினார்.