புதுக்கோட்டை, அக்.23: ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 3 ஆயிரத்து 263 அரசு கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நேற்று கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளதை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள 3 ஆயிரத்து 263 அரசு கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுதவிர பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 583 அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன், மீதமுள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார்.
தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி புதுக்கோட்டை நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி உள்ள பல்லவன் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் குளத்தின் அருகே உள்ள சாந்தநாதசுவாமி கோவிலுக்குள் சென்றார். அப்போது குளத்து தண்ணீர் கோயிலுக்குள் வருவதை கண்ட கலெக்டர் உடனே கோவிலுக்குள் குளத்து நீர் வருவதை தடுக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.