புதுக்கடை, அக்.23 : புதுக்கடையில் நேற்று அதிகாலை மொபைல் கடையை உடைத்து உள்ளே புகுந்த திருடனை கண்காணித்த வியாபாரி கடைக்குள் வைத்து அவனை பூட்டினார். இதை பார்த்த 2 திருடர்கள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குமரி மாவட்டம் புதுக்கடை - முஞ்சிறை சாலையில் தென்னாட்டுவிளையில் மொபைல் மற்றும் டி.வி. டிஷ் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடை பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் பைக்கில் சில வாலிபர்கள் சுற்றி திரிந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்த பால் பூத் வியாபாரி ஒருவர் கவனித்தார். தொடர்ந்து அந்த வாலிபர்களின் நடவடிக்கைகளை அவர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபர் மொபைல் கடையின் ஷட்டரை கூர்மையான கம்பி போன்ற ஆயுதத்தால் உடைத்து உள்ளே புகுந்தார். இதை பார்த்த அந்த வியாபாரி நைசாக சென்று திருடனை உள்ளே வைத்து ஷட்டரை இழுத்து மூடி விட்டார். இதை பார்த்ததும் பக்கத்தில் மறைந்திருந்த மற்ற 2 பேரும் பைக்கை எடுத்து கொண்டு வேகமாக தப்பியோடி விட்டனர்.
உடனடியாக கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கடை உரிமையாளர் வில்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பொதுமக்கள் உதவியுடன் ஷட்டரை திறந்து உள்ளே இருந்த திருடனை மடக்கி பிடித்தார். பின்னர் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. கடையில் சிக்கிய திருடனையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் பிடிபட்ட வாலிபர் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி புல்லுவிளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பதும், தப்பி ஓடிய வாலிபர்கள் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பிடிபட்ட வர்க்கீசை கைது செய்தனர்.