நாகர்கோவில், அக்.23: தென் தமிழக கடல் பகுதியில் 2.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய கடல் தகவல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியில் 2.5 மீட்டர் முதல் 2.8 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு உள்ளது. 23ம் தேதி (இன்று) மற்றும் 24ம் தேதியும் இந்த நிலை காணப்படும். மேலும் தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் தென் கிழக்கு மேற்கு மத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா, கர்நாடகா, வடக்கு கேரளா கடல் பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் இந்த பகுதிகளிலும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்’ என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.