திருச்செந்தூர், அக். 23: திருச்செந்தூரில் யாதவ வியாபாரிகள் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் சங்கத்தின் 22வது ஆண்டு விழா நடந்தது. திருச்செந்தூர், காமராசர் சாலையில் யாதவ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் சுடலைமுத்து தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் வள்ளிநாயகம் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார். முதுகுளத்தூர் மலேசியா பாண்டியன் எம்.எல்.ஏ., தஞ்சாவூர் நீலமேகம் எம்.எல்.ஏ., அகில இந்திய யாதவ மகா சபை துணைத்தலைவர் நந்தகோபால், இணைப்பொதுச்செயலாளர் அடைக்கலம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பெரி கபிலன், கிருஷ்ணர் படத்தை திறந்துவைத்தார்.
யாதவ வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் பெருமாள் மாவீரன் அழகுமுத்துக்கோன் படத்தையும், முன்னாள் பொருளாளர் வைகுண்டம், சங்க கட்டிட கல்வெட்டையும் திறந்துவைத்தனர். இதைத்தொடர்ந்து ராஜ்மஹாலில் நடந்த சங்க ஆண்டு விழாவுக்கு திருச்செந்தூர் யாதவ மகாசபை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் கணேசன், கவுரவ ஆலோசகர் கணேசன் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து, 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சிகளில் சிவசுப்பிரமணியம், பொறியாளர் நாராயணன், யாதவ வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் மூக்கன், கவுரவ ஆலோசகர் நட்டார், நீலகண்டன் சொக்கலிங்கம் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் புதிய தலைவராக போட்டோ கண்ணன், செயலாளராக பெரியசாமி, பொருளாளராக வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். யாதவ மகாசபை தலைவர்களான முருகேசன், ஆறுமுகம், நாதன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் யாதவ வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியை நாகராஜன் தொகுத்து வழங்கினார். கவுரவ ஆலோசகர் வேல்முருகன் நன்றி கூறினார்.