×

செய்யாறு அருகே போலீசார் துரத்தியபோது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து பலி

செய்யாறு, அக்.23: செய்யாறு அருகே போலீசார் துரத்தியபோது பிரபல ரவுடி கிணற்றில் தவறி விழுந்து பலியானார். மற்றொருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் பாட்டில் மணி(32). இவனது கூட்டாளி திருநெல்வேலி அடுத்த காழியூத்து கிராமம், பூந்தோட்டம் தெருவைச் சேர்ந்த குண்டு கார்த்திக்(35). இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் ஆவார்கள். இவர்களை சென்னை ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் தனிப்படை போலீசார் பாட்டில் மணியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் போலீசார் உதவியுடன் பாட்டில் மணியை தேடி வந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்டோர் ஒரு காரில் தூசி நோக்கி சென்றனர். அப்போது காஞ்சிபுரம் அருகே கலவை சாலையில் வடமாவந்தல் கிராமம் அருகே போலீசார் தங்களை தூரத்தி வருவதை பார்த்த அவர்கள் காரிலிருந்து இறங்கி நாலாபுறமும் சிதறியோடினர். இதையடுத்து போலீசாரும் காரில் இருந்து இறங்கி அவர்களை துரத்தி சென்றனர். அப்போது குண்டு கார்த்திக் என்பவனை மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் மின்னல் வேகத்தில் தப்பியோடினர்.

இந்நிலையில் வடமாவந்தல் கிராமத்தில் கன்னியப்பன் என்பவரது நிலத்தில் உள்ள கிணற்றில் ஒருவர் சடலமாக கிடப்பதாக நேற்று தூசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தபோது இறந்தவர் பிரபல ரவுடி பாட்டில் மணி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் போலீசார் தூரத்தி சென்றபோது மணி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பின்னர், காஞ்சிபுரம் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நமண்டி கிராமம் விஏஓ அரிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Famous Rowdy ,
× RELATED பிரபல ரவுடியின் கூட்டாளிகள்...