காஞ்சிபுரம், அக்.23: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள நீத்தார் வழிபாடு மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.காஞ்சிபுரம் நகராட்சி ஓரிக்கை பகுதியில் உதயமாங்குளம் குளக்கரையில் நீத்தார் வழிபாடு செய்யும் மண்டபம் உள்ளது. இந்த இடத்தை ஓரிக்கை, மிலிட்டரி சாலை, சின்ன அய்யங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் தகனம் செய்ய பயன்படுத்துகின்றனர்.இறுதிச் சடங்கு மற்றும் வழிபாடு அருகில் உதயமாங்குளம் கரையில் உள்ள நீத்தார் வழிபாடு மண்டபத்தில் நடைபெறும். இந்த நீத்தார் வழிபாடு மண்டபத்தை ஒரு சிலர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மாடுகளை கட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் மாட்டு தொழுவமாக நீத்தார் வழிபாடு மண்டபம் மாறியுள்ளது.
மேலும் மாலை நேரங்களில் சமூக விரோதிகள் சிலர், நீத்தார் வழிபாடு மண்டபத்தில் கூட்டமாக வந்து மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அப்படியே போட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீர் குழாய் இல்லாததால் நீத்தார் வழிபாடு செல்பவர்கள், கைகழுவவும், குளிக்கவும் முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பகுதியில் தண்ணீர் குழாய் அமைப்பதுடன், நீத்தார் வழிபாடு மண்டபத்தை சீரமைத்து, சமூக விரோதிகளிடம் இருந்து மீட்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.