×

டெல்லியை சேர்ந்த போலி டாக்டர் கைது

மேட்டூர், அக்.18.  நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டியில் போலி மருத்துவர் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதில், அப்பாவிகள் பாதிப்பிற்குள்ளாகி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவத்துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, ஜலகண்டபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ரேவதி மற்றும் மருத்துவர்கள் ராஜகணபதி, பாலாஜி உள்ளிட்டோர் விருதாசம்பட்டிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர்.அப்போது, அங்குள்ள பஸ் ஸ்டாப் குதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் கிளினிக்கில் சந்தேகத்தின்பேரில் திடீரென சோதனையிட்டனர்.  அங்கு, டெல்லியைச்சேர்ந்த அமீத்குமார் என்பவர் முறையாக அலோபதி மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகளை கொண்டு சிகிச்சையளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பேரில், அமீத்குமாரை பிடித்த மருத்துவ குழுவினர் அவர் பயன்படுத்திய ஆங்கில மருந்துகள் மற்றும் பிற பொருட்களை கைப்பற்றி நங்கவள்ளி  போலீசில் ஒப்படைத்தனர். நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிந்து அமீத்குமாரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தி சிகிச்சையளித்து, போலீசில் சிக்கியது தெரிய வந்தது.

Tags : doctor ,Delhi ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!