பரமத்திவேலூர், அக்.18: பரமத்தி பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில், பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை தூதுவர்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு ஒழிப்பு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதையடுத்து பரமத்தி பேரூராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மேல்நிலை வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி வளாகம், அவர்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் பொது இடங்களில் டெங்கு ஒழிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர். சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் குமார், அப்துல் ரஹீம் ஆகியோர், மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்த பயிற்சி அளித்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.