ஓசூர்,அக்.18: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூரில் தர்கா பகுதியில் உள்ள சிவரஞ்சினி திருமண மண்டபத்தில் நாளை மற்றும் 20ம் தேதிகளில் மாநில இளைஞரணி அறக்கட்டளை சார்பில், அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரை போட்டிகளுக்கான தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது. மாநில அளவில் முதல் இடத்திற்கான தேர்வு போட்டிகளை மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிடுகிறார். இதற்காக ஓசூருக்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாநில எல்லையான ஜூஜூவாடியில் மதியம் 1 மணியளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேருர் நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.